இதழியல் களத்தில் பெரியார் (நூல் அறிமுகம்)

-இக்லாஸ் உசேன்




கருஞ்சட்டைப் பதிப்பகம் வெளியீடாக விரைவில் வரவிருக்கிறது. 'இதழியல் களத்தில் பெரியார்' எனும் நூல். கிட்டத்தட்ட 1500 பக்கங்களைக் கொண்டது. தட்டச்சு, பிழைதிருத்தம் முதலான பணிகளை இந்நூலாசிரியர் பேராசிரியர் இரா.சுப்பிரமணியனே கவனித்துக் கொண்டதால் எனக்கான பணி வடிவமைப்புப் பணி மட்டுமே. அதுவும் முடிந்து தற்போது அச்சுக்கு அனுப்பிவிட்டோம்.


1936 ஆம் ஆண்டு 'விடுதலை' தொடங்கப்பட்ட காலம் முதல் பெரியார் இறந்த 1973ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 'விடுதலை' இதழில் இதழியல் சார்ந்து எழுத்தப்பட்ட கட்டுரைகளை உள்ளடக்கியதுதான் இந்த நூல். இதில் இரண்டு வகையான அரசியல் பதிவு செய்யப்பட்டுள்ளது‌. ஒன்று பெரியார் முன்னெடுத்த சாதி ஒழிப்புக் கொள்கை அடிப்படையிலான பத்திரிகை செய்திகள்; அடுத்துப் பார்ப்பனியக் கொள்கைகளை ஆதரிக்கும் பத்திரிகைகளைக் கண்டிப்பதோடு இந்தச் சாதிய சமூகம் எப்படிப்பட்டது என்பதை தெரிந்துகொள்ள வழிவகை செய்வது என்பதாக இந்நூலின் கட்டுரைகள் அமைந்துள்ளன.

இந்த நூலின் மாதிரிப் படிகள் என்னிடம் இருந்தன. அதை எடுத்துப் பார்த்துக்கொண்டு இருந்தபோது 183 ஆம் பக்கத்தில் ஒரு 'ஹைலைட்ஸ்' கண்ணில்பட்டது அதில், "தமிழைவிட ஹிந்தி இலக்கண இலக்கியச் சிறப்புடைய பாஷையுமல்ல; ஹிந்திக்குச் சொந்தமாக எழுத்துகள்கூட இல்லை. ஹிந்தி படிப்பதினால் தென்னாட்டுச் சிறுவர்களுக்கு வடநாட்டில் பிழைப்புக்கு வழிகிடைக்குமெனக் கூறப்படும் பித்தலாட்டத்தையும் ஸர். எம். கிருஷ்ணன் நாயர் வெட்ட வெளிச்சமாக்கிவிட்டார்." என்று இருந்தது. சரி இது எந்த ஆண்டு எழுதப்பட்டது என்று பார்த்தபோது 03.12.1937 இல் எழுத்தப்பட்டுள்ளது என்று இருந்தது.


இன்றைய காலகட்டத்தில் ஒன்றிய அரசு ஹிந்தி மொழியைத் தமிழகத்தில் திணிப்பதற்குச் சொல்லப்படும் காரணங்களுக்கு எதிர்வினையாக நாமும் வளர்ச்சி அடிப்படையில் மறுப்பு சொல்லிக் கொண்டு வருகிறோம். ஆனால், 1937இல் இப்படி ஒரு பதிவு; அதுவும் தென்னிந்தியர்கள் ஹிந்தி படிப்பத்தால் வடநாட்டில் வேலை கிடைக்கும் எனச் சொல்வது பித்தலாட்டம் என்று பதிவு செய்துள்ளார்கள். எந்த ஆதாரத்தை வைத்து இப்படி கிருஷ்ணன் நாயர் பதிவு செய்துள்ளார் என அந்தக் கட்டுரையில் தேடியபோது. "அகில இந்திய அரசியல் விஷயங்களில் கவனம் செலுத்தக்கூடியவர்கள் தென்னாட்டில் 10 ஆயிரத்துக்கு ஒருவர் இருக்க மாட்டார்கள்" என்று அந்தப் பத்தி தொடங்கி மேற்சொன்ன ஹைலைட்ஸ் கருத்துடன் வருகிறது‌.

சர்.கிருஷ்ணன் நாயர் சொன்னது பற்றி வேறு ஏதேனும் இருக்கிறதா? என்று தேடியபோது அந்தக் கட்டுரையில் வேறெதுவும் இல்லை. சரி, சர்.எம். கிருஷ்ணன் நாயர் பற்றி தெரிந்துகொள்ளலாம் எனக் கூகுளில் தேடியபோதுதான் நீதிக்கட்சி தலைவர்களில் அவரும் ஒருவர் என்பதையும், நீதிக்கட்சி ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினராகவும் பிறகு ஆங்கிலேயர் ஆட்சியில் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றினார் என்பதையும் தெரிந்துகொள்ளமுடிந்தது.

மொழி பற்றி அவர் ஏதேனும் புத்தகம் எழுதி உள்ளாரா? எனத் தேடியபோது, கவிஞர் கருணானந்தன் எழுதிய பெரியார் வாழ்க்கை வரலாறு நூலில் ஒரு தகவல் இருந்தது. அதாவது 1938இல் பிப்ரவரி மாத இறுதியில் காஞ்சிபுரத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு மகாநாட்டுத் திறப்பாளராகக் கிருஷ்ணன் நாயர் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தமையே அந்தப் பதிவாகும். அந்த நூலில் கட்டுரை வந்த ஆண்டு 1937 ஆகும். காஞ்சி மகாநாடு 1938 என்பதால், 1937ஆம் ஆண்டு நவம்பர் - டிசம்பர் மாத விடுதலை இதழில் எம். கிருஷ்ணன் நாயர் எழுதிய அல்லது பேசியதாகத் தகவல் ஏதாவது வந்துள்ளதா? எனத் தேடிப் பார்த்தேன். 


1937ஆம் ஆண்டு டிசம்பர் மாத விடுதலையில் தேடிய போது எந்தச் செய்தியும் இல்லை. பிறகு நவம்பர் மாத விடுதலை இதழ்களைப் பார்த்தபோது, அச்சமயம் இரண்டாம் உலகப்போர் தொடங்கிய காலகட்டம் என்பதால் அதில் ஜப்பான் பற்றிய செய்திகள் நிறைய இருந்தன. இந்திய அளவில் காங்கிரஸ்க்கு எதிராக முஸ்லிம்லீக் அரசியல் எழுச்சிப் பெற்றிருந்தது. அத்துடன் ராஜாஜி ஆட்சிக்கு எதிராகத் தமிழர்ப் படை போராட்டங்கள் பற்றிய செய்திகள் ஒருபக்கம் இருந்ததோடு, மறுபக்கம் இன்னொரு செய்தியும் இருந்தது. 1937 நவம்பர் 16 ஆம் நாளன்று வெளியான விடுதலை இதழில் முதல் பக்கத் தலைப்புச் செய்தியாகச் சர் எம்‌. கிருஷ்ணன் நாயர் எழுதிய ‘ஹிந்தி கட்டாய பாடம் வேண்டாம்‘ என்ற கட்டுரை வெளியாகி இருந்தது.

ஹிந்து ஆங்கில இதழில் வெளிவந்ததை ‘விடுதலை‘ தமிழாக்கம் செய்து வெளியிட்டிருந்தது. ஹிந்தி ஒரு பித்தலாட்டம் என ஆராய்ச்சிப் பூர்வமாகச் சொல்லப்பட்டதாக விடுதலை தலையங்கத்தில் சொன்ன கட்டுரையை இங்கு முழுமையாகப் பதிவு செய்கிறேன்.



“சர் எம்.கிருஷ்ணன் நாயர் நவம்பர் 16ஆம் தேதி ”ஹிந்து” பத்திரிகையில் எழுதியிருப்பதாவது:-
 எனது நண்பர்களான கனம் முதன் மந்திரி ராஜகோபாலாச்சாரியாரும், கல்வி மந்திரி கனம் சுப்பராயனும் முதல் மூன்று வகுப்புகளில் ஹிந்தி கட்டாய பாடமாக்குவதைக் கடைசியாக முடிவு செய்திருக்க மாட்டார்கள் என நம்புகிறேன். சாமானிய மாணவிகள் மனோ சக்தி மிகவும் குறைவானது. ஒரு மாணவன் அல்லது மாணவி பள்ளிக் கூடத்தில் இங்கிலீஷ், மலையாளம் அல்லது தாய் பாஷை, கணக்கு, பூகோளம், சரித்திரம் முதலிய பாடங்கள் படிக்க வேண்டியதாக இருக்கிறது. அவைகளுடன் ஹிந்தியும் கற்க வேண்டுமென்று கட்டாயப்படுத்துவது குழந்தைகளின் மூளைக்கு அமிதமான வேலையைக் கொடுப்பதாகும். 15 வயது திகைந்த பிறகே மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சையில் சேரலாம். எனவே, ஆறாவது பாரத்தில் மாணவர்களின் சராசரி வயது 15 என ஏற்படுகிறது. ஆகவே, முதல் மூன்று பாரங்களில் படிக்கும் மாணவ மாணவிகளின் சராசரி வயது முறையே 10, 11, 12 ஆகவே இருக்க வேண்டும். ஆரம்பப் பள்ளிக் கூடங்களில் மூன்றாவது வகுப்பு வரை படித்த மாணவ-மாணவிகள் கிராமங்களுக்குச் சென்று பெற்றோர் தொழிலில் ஈடுபடும்போது தாம் படித்தவைகளை வெகு சுலபத்தில் மறந்து எழுத்து வாசனை இல்லாதவர்கள் ஆவதை நாம் அனுபவத்தில் காண்கிறோம். தாய் பாஷையில் கற்ற கல்வியின் கதியே இதுவானால் முதல் மூன்று வகுப்புகளில் கற்றுக்கொள்ளும் ஹிந்தியின் கதி என்னாகுமென்று நான் சொல்லவும் வேண்டுமா? பள்ளிக் கூடத்தை விட்டுப் பிரிந்ததும் மாணவ-மாணவிகள் கட்டாயம் ஹிந்தியை மறக்கத்தான் செய்வார்கள்.
ஹிந்தியும் வேலையில்லாமையும்
ஹிந்தி கற்றால் வேலையில்லாதவர்கள் வடநாட்டுக்குச் சென்று பிழைக்க வழியேற்படுமென்றும் சொல்லப்படுகிறது. 1937 மே 31ஆம் தேதி மஹா கனம் ஸர். தேஜ்பகதூர் சாப்ரூ லண்டன் கிழக்கிந்திய சங்க முன்னிலையில் ஒரு உபந்யாசம் படித்தார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது: 
“படிப்பாளிகளில் வேலையில்லாமலிருப்பதை விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட கமிட்டியில் நான் தலைவனாயிருந்தேன். அப்பொழுது, கலாசாலைப் பட்டதாரிகள் மாதம் 13, 15 ரூபாய் சம்பளத்தில் காண்ஸ்டபில்களாக இருக்கிறார்கள் என்றும், கான்பூர் முதலிய நகரங்களில் பட்டதாரிகள் தெருத் தெருவாய் பால் விற்கிறார்கள் என்றும் அநேக உத்தியோகஸ்தர்கள் சாட்சியம் கூறினார்கள்”.
மேலே எடுத்துக் காட்டப்பட்டிருக்கும் ஸர்.சாப்ரு அபிப்ராயங்களினால் வடநாட்டு நிலைமை விளங்குகிறதல்லவா?. நம்முடைய மாகாணத்திலும் வேலையில்லாப் படிப்பாளிகள் இருந்தாலும் வடநாட்டு நிலைமைக்கு அவர்கள் வரவில்லை. ”ஹிந்தி” தாய் மொழியாக இருக்கும் ஐக்கிய மாகாண நிலைமை இப்படியிருக்கும்போது ஹிந்தி படித்த தென்னாட்டார் வடநாட்டுக்குச் சென்று எப்படித் தொழில் தேடப் போகிறார்கள்?
சமூக சமயப் பிரச்சினைகள்
ஹிந்தி அகில இந்தியப் பொது பாகையாக்கப்படும்போது சமூக சமயப் பிரச்சினைகளும் கிளம்பக் கூடும். இடைக்கால மந்திரி சபையில் முஸ்லிம் மந்திரியாக விருந்த கான் பகதூர் பி.கலிபுல்லா ஸாஹிப் ஏற்கனவே இந்தப் பிரச்சினையைக் கிளப்பி உருதுவே அகில இந்தியப் பொது பாஷையாக இருக்க வேண்டுமென்று வற்புறுத்தியிருக்கிறார். எனக்கு ஹிந்தியும் தெரியாது; உருதுவும் தெரியாது. எனினும், ஹிந்தியில் ஏராளமான சமஸ்கிருதப் பதங்களும், உருதுவில் ஏராளமான பார்சி மொழிகளும் அடங்கியிருப்பதாக அறிகிறேன். மற்றும் ஹிந்தி திராவிட பாஷைகளைப் போல இடமிருந்து வலமாகவும் உருது வலமிருந்து இடமாகவும் எழுதப்படுவதாகவும் தெரிய வருகிறது.
ஹிந்தி-சமஸ்கிருத லிபியான நாகரியிலும், உருது அரபி லிபியிலும் எழுதப்படுவதாகத் தோன்றுகிறது. சில ஹிந்துக்கள் சமஸ்கிருதத்தைப் புனித பாஷையாக மதிக்கிறார்கள். சில முஸ்லிம்கள் அரபி பாஷையே புனித பாஷையென நம்புகிறார்கள். ஹிந்தியை ஒருசாரர் ஆதரிக்கிறார்கள் என்பதை நான் மறந்துவிடவில்லை. ஆனால், ஆதரிப்பவர்களைவிட எதிர்ப்பவர்களே அதிகம் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. ஆகவே, சாதக பாதக அபிப்பிராயங்களைச் சீர்தூக்கிப் பார்த்து முதன் மந்திரியும் கல்வி மந்திரியும் ஹிந்தி பிரச்சினையை முடிவு செய்வார்கள் என்று நம்புகிறேன். ஹிந்தியை இஷ்டப்பாடமாக்குவதையும் அதற்கு சர்க்கார் பொருளுதவி செய்வதையும் நான் ஆட்சேபிக்கவில்லை.”

என்று ஹிந்தி படிப்பதால் எந்தப் பயனும் இல்லை என்று 1937 இல் கிருஷ்ணன் நாயர் தெரிவித்துள்ளார். அதுவும் ஹிந்தி சார்ந்த கல்வியைப் படித்தவர்கள் பால் வியாபாரம்தான் செய்கிறார்கள் என்ற மேற்கோளையும் பதிவு செய்துள்ளார். இன்றைக்குப் பிரதமர் மோடி ”வட இந்தியர்களே பக்கோடா வியாபாரம் செய்யுங்கள்” என்று சொல்வது போல் அன்றைய நிலை இருந்ததுள்ளது.
1937இல் எந்த வேலைவாய்ப்பும் ஏற்படுத்த முடியவில்லை என்று கிருஷ்ணன் நாயகரின் கட்டுரை நமக்குத் தெரியப்படுத்துகிறது. ஆனால், 85 ஆண்டுகள் கடந்தபின்பும் இன்று ஹிந்தி மொழி தொழிலாளர்களை மட்டுமே உற்பத்தி செய்து வருகிறது.

கிருஷ்ணன் நாயர் தனது கட்டுரையில் பி.கலிபுல்லா சாஹிப் பற்றி ஒரு தகவலைச் சொல்கிறார். அதாவது ஹிந்திக்குப் பதில் உருது மொழியே அகில இந்திய மொழியாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகச் சொல்கிறார். அதாவது இன்றைய இந்தியா- பங்களாதேஷ் -பாகிஸ்தான் பகுதிகளை உள்ளடக்கிய பகுதியைக் கொண்ட அனைத்து இந்தியப் பகுதிக்கும் உருது மொழியைத் தேசிய மொழியாக ஆக்க வேண்டும் என்று கருத்துச் சொன்னதாக சொல்கிறார்.
கிருஷ்ணன் நாயர் கட்டுரை வந்த அதே காலத்தில் இன்னொரு விளம்பரமும் விடுதலையில் இடம்பெற்றது. அதாவது, ஆம்பூரில் 28.11.1937 அன்று ‘வடாற்காடு ஜில்லா 2 ஆவது சுயமரியாதை மகாநாடு’ நடக்கப் போவதாக விளம்பரம் வந்திருந்தது. அதில், புதுக்கோட்டை திவானாக இருந்த கலிஃபுல்லா சாகிப் அவர்கள் தலைமை வகிப்பதாகவும் அண்ணா அவர்கள் மாநாட்டை திறந்து வைப்பதாகவும் விளம்பரம் வந்திருந்தது. 
சுயமரியாதை மகாநாட்டில் யார் என்ன பேசி உள்ளார்கள்? எனத் தேடியபோது, 28ஆம் தேதி மகாநாட்டில் தலைமை ஏற்றுப் பேசிய கலிஃபுல்லா சாஹிபின் முழுப் பேச்சையும் மறுநாளே விடுதலையில் முழுமையாக வெளியிட்டிருந்தமையைக் காணமுடிந்தது. 

அதில் இந்து, முஸ்லீம், வந்தே மாதரம், காங்கிரஸ் தேர்தல் வெற்றி போன்ற அந்தக் கால முக்கிய அரசியல் சூழலைப் பற்றி எல்லாம் கலிஃபுல்லா சாஹிப் விவரித்துவிட்டு ஹிந்தியைப் பற்றி குறிப்பிடும் போது.

"10000க்கு ஒருவர்கூட வட இந்தியா போகிறவர்கள் இல்லையே. அப்படியிருக்க ஒருவருக்காக வேண்டி 10000 பேர் கல்வி கற்பதைக் கொலை செய்யலாமா?" என்று கேட்டால், "இந்தியா முழுமைக்கும் ஒரு பாஷை வேண்டும். அதற்காகத்தான் நான் வலுக்கட்டாயப்படுத்கிறேன் என்கிறார்" பதில். உண்மையை விளக்கவேண்டுமானால், கனம் ராஜகோபாலாச்சாரியாரை நம்பி பிழைப்பில்லாத ஏழை பிராமணர்கள் ஹிந்தியைப் படித்து தெருவாய் அலைந்து கொண்டிருப்பதாயும், அப்படி ஆயிரக்கணக்கான பிராமணர்கள் திண்டாடிக் கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டு சென்னை மாகாண பிரதம மந்திரி ஸ்தானத்தை வகிக்கும் கனம் ராஜகோபாலாச்சாரியார் வாளாவிருக்க முடியாமல் அவர்களுக்கு எப்படியாவது ஒரு பிழைப்புக்கு வழிகாட்ட வேண்டியது அவரது கடமையாகியதால் அவர் ஹிந்தியைக் கட்டாய பாடமாக்கு என்று கங்கணம் கட்டிக்கொண்டிருப்பதாயும் ஒரு சாரார் கூறுகின்றனர்” (விடுதலை 29.11.1937) என்கிறார். 


ஹிந்தி படித்தவர்கள் பால் வியாபாரம்தான் பண்ணுகிறார்கள் என்று கிருஷ்ணன் நாயர் சொன்னார்; தமிழ்நாட்டில் ஹிந்தி படித்த பார்ப்பனர்கள் பிச்சை எடுக்கிறார்கள் அதனால்தான் ராஜாஜி ஹிந்தியைக் கட்டாயமாகத் திணிப்பது அவர்களின் நலனுக்காகவே என்கிறார் கலிஃபுல்லா சாஹிப்.
பெரியார் மற்றும் சாஹிப் இருவருமே 1937-1938 ஆம் காலகட்டத்தில் ஹிந்திக்கு எதிராகத் தீவிரமாக இயங்கினார்கள். கட்டாய ஹிந்தியை எதிர்த்துத் தமிழர் பெரும்படை திருச்சியில் கிளம்பி சென்னை வந்து சேர்ந்தபின் நடந்த மிகப்பெரிய கூட்டத்தில் பெரியார் பேசும்போது சொன்னதாவது;



நான் இந்தியை 1924-1925 ஆம் வருஷத்திலேயே எதிர்த்திருக்கிறேன். அதற்கு ஆதாரம் 'குடி அரசு' பத்திரிகையில் பார்க்கலாம். அப்போது ஆச்சாரியார் எனக்கு முக்கிய நண்பராகவும், தலைவராகவும்கூட இருந்தார் என்று சொல்லலாம். தோழர் கலிபுல்லா சாயபு அவர்கள் ஆச்சாரியார் மந்திரி ஆவதற்கு முன்பே, இந்தி கட்டாயம் ஆகும் முன்பே- 'இந்தி இஷ்டப் பாடமாகக்கூட இருக்கக் கூடாது' என்று பிரச்சாரம் செய்து பண்டித ஜவஹர்லாலுடன் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தவர். இன்றைய இந்தி எதிர்ப்புத் தோழர்களில் மற்றும் அனேகரும் வெகுநாளாகவே 'தமிழ் நாட்டிற்கு இந்தி ஏன்?' என்று கண்டித்து வந்திருக்கின்றார்கள்” (விடுதலை 6.1938). 

 'இதழியல் களத்தில் பெரியார்' என்னும் நூலில் வந்த ஒரேவொரு ஹைலைட்ஸ் ஹிந்திக்கு எதிராகத் தமிழ்நாட்டு அரசியலில் பெரியார் முன்னெடுத்த களச் செயல்பாடுகளையும் அறிவு சார்ந்த செயல்பாடுகளையும் தெரிந்துகொள்ள வழிவகுத்தது. இப்படியாக இந்தி திணிப்பிற்கு எதிரான தனது காலத்தில் ஒலித்த குரல்களை விடுதலை நாளேடு பதிவு செய்துள்ளமையை இந்நூலிலுள்ள கட்டுரைகளின் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது.
இதழியல் களம் என்பது தனது சமகாலத்திய நேர், எதிர் துருவங்களை வெளிச்சமிட்டுக் காட்டக்கூடியதாகும். வரலாற்றுப் பக்கங்களை எழுதுவதற்கு ஓர் இதழியலின் இயங்குதளம் என்பது அடிப்படை ஆவணமாகக் கருதத்தக்கதாகும். அந்நிலையில் அக்காலத்தை ஆவணமாக்கிய விடுதலை என்னும் இதழின் ஏட்டுப்பக்கங்களைத் தொகுத்துத் தருகின்ற முயற்சியை இந்நூல் மேற்கொண்டுள்ளது. இந்தி திணிப்பிற்கு எதிரான கலகக் குரல்களை மட்டும் அல்லாமல், அக்காலத்திய சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டுச் சூழல்களையும் விடுதலை நாளேட்டின் வழியாக இந்நூல் பதிவு செய்துள்ளது. கால மாற்றத்தினால் கருத்துத் திரிபுகளுக்கும், சந்தர்ப்பவாத அரசியல் சமூக சூழல்களுக்கும் உட்படும் சமூகப் புரிதல்களை அகற்றி உள்ளதை உள்ளபடியே எடுத்துக்காட்டும் அசல் தன்மையை உள்ளடக்கியதாக இந்நூல் அமைந்துள்ளது.

நன்றி




















Post a Comment

Previous Post Next Post